வேதாரண்யம் பகுதியில் முக்குலத்தோர் புலிப்படை என்ற சாதிவெறி அமைப்பை சேர்ந்த, சமூகவிரோதிகள், அண்ணல் அம்பேத்கரின் சிலையை தகர்த்துள்ளனர். அத்துடன் அந்தக் காட்சியை காணொளியின் மூலம் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு தங்கள் சாதி வெறி வன்மத்தை பரப்பியுள்ளனர்.
இச்சம்பவம் போலீஸ் ஸ்டேசன் முன்பாக நடந்தது என்பது ஆதிக்க சாதி வெறியர்களுக்கு எவ்வளவு தூரம் அரசு செல்வாக்கு உள்ளது என்பதை வெட்ட வெளிச்சமாகிறது. ஏற்கனவே இருந்த சிலையை உடைத்து விட்டு, புதிதாக சிலை அமைத்தது பிரச்சினையை தீர்ந்து விட்டதாக கூறுகின்றன பத்திரிக்கைகள்.
ஒரு பெண்ணை பாலியல் வல்லுவுறவு செய்து விட்டு அவரிடம் மன்னிப்பு கேட்பதற்கு ஒப்பானது இது. மேலும் இது இரு தனிப்பட்ட நபர்களின் மோதலின் காரணமாக நடந்த விளைவு என்பது போல ஒரு தோற்றத்தை பத்திரிக்கைகள் செய்தி வெளியிடுகிறது. ஆனால் முக்குலத்தோர் புலிப்படை அந்த சிலையை அகற்ற வேண்டும் என்று நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு இருக்கிறது. இந்த சிலை உடைப்பு திட்டமிட்டு முக்குலத்தோர் புலிப்படையால் நடத்தப்பட்டிருக்கிறது.
இது அம்பேத்காரை ஒரு சாதித் தலைவராகப் புரிந்து கொள்ளும் ஆதிக்க சாதி வெறியர்களின் அறிவின்மையையே காட்டுகிறது. பிரிட்டிஷ் முதலாளிகளுக்காக உருவாக்கப்பட்ட தொழிற்தகராறு சட்டத்தை நம் இந்திய தொழிலாளர்களுக்கு பயன்படும் வகையில் அச்சட்டத்தில் முக்கிய மாற்றங்களை செய்து வைத்தார் டாக்டர் அம்பேத்கர். தொழிற்தகராறு சட்டம் மட்டுமல்ல சமூகரீதியில் மிகவும் பின்தங்கியுள்ள மக்கள் சமூக அந்தஸ்து பெற வேண்டும் என்ற அடிப்படையில் இட ஒதுக்கீடு முறையில் பல்வேறு குறிப்பிடத்தக்க நல்ல அம்சங்களை டாக்டர் அம்பேத்கர் அவர்கள் சட்டமாக்க போராடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தாழ்த்தப்பட்ட மக்கள் மட்டுமல்ல பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களும் இட ஒதுக்கீட்டின் மூலம் இன்றைய காலம் வரையில் பலனடைந்து வருகிறார்கள் என்றால் அதற்கு டாக்டர் அம்பேத்கரின் பங்கு முக்கியமானது.
எந்தெந்த மக்கள் எல்லாம் சமூக நீதி பெற்று உயர்வு பெறவேண்டும் என்று நினைத்தாரோ அந்த சாதி மக்களே டாக்டர் அம்பேத்கரின் சிலையை உடைக்கிறார்கள் என்றால் அவர்கள் எந்த அளவிற்கு அரசியல் அறிவு அற்றவர்களாகவும், சாதிய அரசியல் செய்யும் சில பிழைப்புவாத ஒட்டுண்ணிகளின் ஆதயத்திற்காக இது போன்ற இழிசெயல்களில் ஈடுபடுகிறார்கள் என்பதை காட்டுகிறார்கள்.
சமூகநிதி என்றால் வெறும் இடஒதுக்கீடு மட்டுமே என்று மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும், அரசியல் கட்சிகளும், தொழிற்சங்கங்களும், சொந்த சாதி மக்களின் சாதி வெறியைத் தூண்டி குற்றவாளிகளாக மாற்றி கட்டப்பஞ்சாயத்து செய்யும் நிறுவனங்களாக மாறி வருகின்றன.
இச்சிலை உடைப்பு சம்பவத்தை புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி (ஐ.டி. ஊழியர்கள் பிரிவு) வன்மையாகக் கண்டிக்கிறது. மேலும் இச்சிலை உடைப்புச் சம்பவத்தில் ஈடுபட்ட சாதிவெறியர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றும் வேடிக்கைப் பார்த்த காவல்துறையைச் சேர்ந்தவர்களை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்றும் கோருகிறது.
கார்ப்பரேட் காவி கூட்டணியானது, ஏற்கனவே இருக்கின்ற தொழிலாளர் நலச் சட்டங்களை முற்றிலும் நீக்கி விட்டு 4 விதிமுறை தொகுப்புகள்(Codes) என்று சுருக்கி தொழிலாளிகளை உரிமைகள் ஏதும் அற்ற கொத்தடிமைகளாக்க முனைந்து கொண்டிருக்கின்றது. இந்தச் சூழலில் தொழிலாளர்களாக ஒருங்கிணைய வேண்டிய நாம், இவ்வாறு சாதிரீதியில் பிளவுபடுவது கார்ப்பரேட்டுகளைப் பாதுகாக்கும். பாசிசமும் இதைத்தான் விரும்புகிறது.
கல்வியிலும், வாழ்க்கைச் சூழலிலும் இந்தச் சமூகத்தில் மற்றவர்களை விட முன்னேறியவர்களாக இருக்கும் ஐ.டி. ஊழியர்களாகிய நாம், சாதி ஏற்றத்தாழ்வு கற்பிக்கும் பிற்போக்குத்தனங்களைக் கைவிட்டு தொழிலாளர்களாக ஒன்றிணைய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
நன்றி.
புஜதொமு ஐ. டி. ஊழியர்கள் பிரிவு.