தனியார்மயமாக்கப்பட்ட, புதிய தாராளமய இந்திய பொருளாதாரம் இயங்கும் முறையை குஜராத்தில் கட்டப்பட்ட மருத்துவமனை பற்றிய இந்தக் கட்டுரை விளக்குகிறது.
லட்சக்கணக்கான மக்களை பாதித்த ஒரு இயற்கை பேரழிவைத் தொடர்ந்து மக்கள் பணத்தில் ஒரு மருத்துவமனை கட்டப்பட்டது. அந்த மருத்துவமனை தந்திரமாக, தாராள மனதுடன் தனியார் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. இது “பொதுத்துறை – தனியார் கூட்டு” என்று அழைக்கப்படுகிறது. அதாவது பொதுப்பணத்தை செலவழித்து அதிலிருந்து தனியார் லாபம் ஈட்ட வேண்டும்.
இத்தகைய கருவிகள் மோடியின் கையில் இருக்கும் போது அதன் மூலம் அவரது பங்காளி அதானி பொதுப் பணத்தில் லாபம் ஈட்டுவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.
நீதிமன்றங்களோ இது எந்த தனியார் நிறுவனத்துக்கு போயிருக்க வேண்டும் என்பதை மட்டும்தான் பரிசீலிக்கின்றன, தனியார் லாப வேட்டையை கேள்விக்குள்ளாக்குவதில்லை.
- 2017-ம் ஆண்டின் பட்ஜெட்டில் குஜராத் மாநிலத்தில் ஒரு எய்ம்ஸ் மருத்துவமனைக்கான திட்டமும், நிதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், 2001-ல் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட பூஜ்-ல் மத்திய அரசின் செலவில் கட்டப்பட்ட மருத்துவமனை எய்ம்ஸ்-மேற்கு என நடத்தப்படுவதாக திட்டம் இருந்தது. பின்னர் அது அதானிக்கு சொந்தமான மருத்துவமனையின் பயிற்சிப் பள்ளியாக மாற்றம் பெற்றது.
- அரசியல்வாதிகளின் திருவிளையாடல்! பல காலமாக குஜராத்தில் நிறுவப்பட(படாமல்) இருந்த எய்ம்ஸ் மருத்துவமனையின் கதையின் பின் உள்ள அரசியல் விளையாட்டு இதுதான்! முடிவாக இந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டில் ‘கருணையுடன்’ அறிவிக்கப்பட்டுள்ளது.
- உண்மையில் முதல் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயியின் திட்டம் நிறைவேறியிருந்தால் குறைந்தபட்சம் ஒரு 15 ஆண்டுகளுக்கு முன்னரே தில்லிக்கு வெளியே முதல் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ச் பகுதியில் உருவாகி நடந்து கொண்டிருக்கும். மாறாக, தற்போதைய பிரதமர் மோடி குஜராத்தின் முதல்வராக இருந்த போது அரசு செலவில் கட்டப்பட்ட அந்த மருத்துவமனை தொடர்பான திட்டத்தை குலைப்பதற்கு எல்லா முயற்சிகளையும் செய்தார்.
ஜனவரி 26, 2001 அன்று குஜராத்-பாகிஸ்தான் எல்லைக்குள் இருக்கும் கட்ச் பகுதியை தாக்கிய ஒரு தீவிரமான பூகம்பம் பேரழிவை விளைவித்தது. அது ஆயிரக்கணக்கானவர்களைக் கொன்று குவித்தது. அது இந்தியா கண்ட மோசமான மனித துயரங்களில் ஒன்று !
இடிந்து அழிந்துபோன கட்டிடங்களுள் பூஜ் மாவட்ட தலைமையகத்தில் உள்ள அரசு மருத்துவமனையும் ஒன்று. அழிக்கப்பட்ட கட்டிடங்களில் 200-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ அலுவலர்கள் மற்றும் பலர் இடிபாடுகளில் புதையுண்டனர்.
அன்றைய பிரதமர் வாஜ்பாய் இரண்டு நாட்கள் கட்சில் தங்கியிருந்து நிவாரணம் மற்றும் புனர்வாழ்வு பணிகளை மேற்பார்வையிட்டார். பழைய அழிந்துபோன GK பொது மருத்துவமனைக்குப் பதிலாக ஒரு புதிய மருத்துவமனை நிறுவுவதற்கு அடிக்கல் நாட்டினார். மறு.நிர்மாணம் செய்யப்படும் ஜி.கே. ஜெனரல் மருத்துவமனை அனைத்து நவீன தொழில்நுட்ப மருத்துவ வசதிகள் உடையதாக இருக்க வேண்டும் என்றும் நாட்டின் மேற்குப் பகுதியிலும் இது தலைசிறந்ததாக விளங்க வேண்டும் என்றும் அவர் அறிவித்தார்.
பிரதம மந்திரி நிவாரண நிதியில் இருந்து ரூ 100 கோடி அதற்கு ஒதுக்கப்பட்டது. தேவைப்பட்டால் இன்னும் நிதி ஒதுக்கப்படும் என்று அறிவித்தார். அப்போதைய குஜராத் முதலமைச்சர் கேசுபாய் பட்டேலுக்கு உறுதியளித்தது போலவே ரூ 100 கோடிக்கு மேலாக மருத்துவமனைக்குச் செலவிடப்பட்டது.
சீனா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளில் பூகம்ப பகுதிகளை ஆய்வு செய்த பிறகு அந்த மருத்துவமனை வடிவமைக்கப்பட்டது. கட்டமைப்பு பாதுகாப்புக்கான சர்வதேசக் குறிப்புகளும் சேர்க்கப்பட்டது. 300 படுக்கை வசதி, 15 வார்டுகள், மூன்று அறுவை சிகிச்சை அறைகளும் நவீன மருத்துவ உபகரணங்களும் அம்மருத்துவமனைக்கு வழங்கப்பட்டன.
பூஜ் மருத்துவமனை கட்டுமான பணிகளில் வாஜ்பாயி பிரத்யேக கவனம் செலுத்தினார். ஒரு மூத்த குஜராத் பா.ஜ. தலைவர் அப்பணிகள் குறித்த முன்னேற்றத்தை தனக்கு இரகசியமாகத் தெரிவிக்கும்படி ஏற்பாடு செய்திருந்தார் அவர். அவ்வாறே அவரும் அறிக்கையை அனுப்பியுள்ளார். நாட்டின் நான்கு பிராந்தியங்களில் நான்கு எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதில் ஆர்வம் காட்டிய பிரதமர், பூஜ்-ல் அமையும் மருத்துவமனை எய்ம்ஸ்-மேற்கு ஆக இருக்க விரும்பினார்.
ஆயினும், வாஜ்பாயி 2004 ஜனவரியில் மருத்துவமனையை திறந்து வைக்கும் நேரத்தில் நரேந்திர மோடி குஜராத் முதலமைச்சராகியிருந்தார்.
பிரதமருடன் சேர்ந்து குஜராத் மாநில அரசும் இம்மருத்துவமனை நிர்மாணத்தை மேற்பார்வையிட்டு வந்தது. எனவே, மாநில அரசும், மத்திய சுகாதார அமைச்சகமும் சேர்ந்து மருத்துவமனையை ஆண்டுக்கு ரூ 15 கோடி செலவில் பராமரிக்கப்படும் என பிரதம மந்திரி அலுவலகத்துக்கும், மத்திய சுகாதார அமைச்சராக இருந்த சுஷ்மா சுவராஜுக்கும் தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக பூகம்பத்தில் இடிந்துபோன மருத்துவமனைக்கு, ஆண்டுக்கு ரூ 3 கோடி செலவு செய்து வந்தது, அரசு. மாநில அரசு, மருத்துவமனையுடன் இணைக்கப்பட்ட ஒரு மருத்துவக் கல்லூரி மற்றும் ஒரு நர்சிங் பள்ளியை அமைப்பதையும் பரிந்துரைத்தது. மத்திய அரசும் இதை விரைவாக அங்கீகரித்தது.
அதன் பிறகு விஷயங்கள் தொய்வடைந்தன. அரசாங்க அமைப்புகளிலிருந்து வெளிவரும் தகவல்களின் படியே மாநில அரசு கட்ச்சில் எய்ம்ஸ் அமைக்கும் திட்டத்தை இழுத்தடித்தது. குஜராத்தின் வடக்கு பகுதியில் எய்ம்ஸ் அமைப்பிற்கான அனுகூலமான இடமாக பதானை பரிந்துரைத்தது மாநில அரசு.
இவ்வாறாக, பிரதம மந்திரி நிவாரண நிதியில் இருந்து ரூ 100 கோடி செலவில் கட்டப்பட்ட பூஜ் மருத்துவமனை தொடர்ச்சியான சூழ்ச்சிகள் மூலம் அதானிக்கு 99 ஆண்டுகால குத்தகைக்கு கைமாற்றப்பட்டது. இங்குதான் இப்போது குஜராத் அதானி இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் இயங்குகிறது. 2009-ல் மோடி முதல்வராக இருந்த போது குஜராத் அரசால் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு குத்தகைக்கு வழங்கப்பட்டது.
அதானிக்கு குத்தகைக்கு விட்டதை எதிர்த்து ஒரு பொது நல வழக்கு 2011 ல் குஜராத் உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்டது. நீதித்துறையுடனான நீண்ட மோதலின் விளைவாக இந்த வழக்கு இப்போது உச்சநீதிமன்றத்தை எட்டி அங்கே நிலுவையில் உள்ளது.
ஆதாம் சக்கி என்பவர் தொடுத்துள்ள இந்தப் பொதுநல வழக்கு, அவரது வழக்கறிஞர் ஹஷிம் குரேஷியால் நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அந்த வழக்கு, அம்மாவட்டத்து ஏழை மக்கள் நலன் கருதியும் கட்டாய நடைமுறைகளை தவிர்த்து அரசாங்க மருத்துவமனையை அதானி குழுமத்திற்கு அரசு வழங்கியிருப்பதற்கு ஆதாரமான முறைகேடுகளையும் பட்டியலிட்டு குத்தகையை இரத்து செய்யுமாறு கோரியது.
இருதய நோய் மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்ற நாராயணா ஹ்ருதயாலயா, பெங்களூரு மற்றும் மணிப்பால் கல்விக் குழும நிறுவனம் ஆகியவற்றிற்கு பூஜ் மருத்துவமனையின் குத்தகையை முறையான காரணம் சொல்லாமல் நிராகரித்தது குஜராத் அரசு. அதற்கு மாறாக,மருத்துவ கல்வி அல்லது பொது சுகாதாரத்தில் பணியாற்றுவதில் முற்றிலும் அனுபவம் இல்லாத அதானி குழுமம் தேர்வு செய்யப்பட்டது.
குஜராத் உயர்நீதிமன்றம் ஜனவரி 31, 2012 அன்று அதன் தீர்ப்பில் பொதுநல வழக்கை நிராகரித்தனர். தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் பாஸ்கர் பட்டாச்சார்யா மற்றும் ஜே.பி.பர்திவாலாவும் மருத்துவமனை இயக்கம் குறித்த பொது-தனியார் கூட்டணியை ஏற்றுத் தீர்ப்பு வழங்கினர். மேலும், பின்பற்றப்பட வேண்டிய கடுமையான விதிமுறைகளை இத்தீர்ப்பு விதித்தது.
அவை, 450 படுக்கை வசதிகளை ஏற்படுத்துவது, கட்ச்சிலிருந்து வரும் மாணவர்களுக்க்கு மருத்துவக் கல்லூரியில் 10% இடங்களை ஒதுக்குவது, ஏழை நோயாளிகள் மற்றும் மாநில அரசாங்க ஊழியர்களுக்கு இலவச சிகிச்சையளிப்பது, அரசு மற்றும் அதானி குழும பிரதிநிதிகளைக் கொண்ட ஒரு குழுவை அமைத்து மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரியிலிருந்து பெறும் வருவாய் முழுவதும் அம்மருத்துவமனையின் அபிவிருத்திக்கு மட்டுமே செலவிடுவது ஆகியனவாகும்.
அதன்பிறகு, 2014 அக்டோபரில் ஆதாம் சக்கி மீண்டும் உயர்நீதிமன்றத்தை அணுகினார். 2012-ல் நீதிமன்றத் தீர்ப்பு வலியுறுத்திய விதிமுறைகள் எதுவும் கடைபிடிக்கப்படவில்லை என்றும் முறையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும் மனுச்செய்தார். இது நீதிமன்ற அவமதிப்பு என்றும் குறிப்பிட்டிருந்தார். ஒரு குறிப்பிட்ட மாவட்டத்தின் மாணவர்களுக்கு இடங்களை இட ஒதுக்கீடு செய்ய முடியாது என்றும், 10% ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்கள் மற்ற மருத்துவ கல்லூரிகளுக்கு பொருந்தும் விதிமுறைகளின்படி வழங்கப்பட வேண்டும் என அரசாங்கத் தரப்பு வாதாடியது. மீண்டும் இவ்வழக்கு உச்சநீதிமன்றத்துக்குச் சென்றது.
மோடி, குஜராத்துக்கு எய்ம்ஸ் வருகிறது என்று ஆசை காட்டிவரும் நிலையில், வடோதரா மற்றும் ராஜ்காட் நகரங்கள் தங்கள் ஊரில் தான் அது அமையவேண்டுமென பங்காளிச் சண்டையில் குதித்துள்ளனர். முன்னாள் முதல்வர் ஆனந்தி பென் படேலின் பதவிக்காலத்தின் போது வடோதராவிற்கு ஆதரவு அதிகமாக இருந்தது. மோடிக்கு இணக்கமான மந்திரி சௌரப் பட்டேல் வடோதராவில் எய்ம்ஸ் அமையவேண்டிப் பெருமுயற்சி செய்தார்.
விஜய் ரூபனி அரசாங்கத்தில் படேல் தனது அமைச்சரவையை இழந்தபோது ராஜ்கோட்டில் எய்ம்ஸ் அமைக்க ஆதரவாக பெருகியது.தற்போதைய முதல்வர் ராஜ்கோட்டைச் சேர்ந்தவர். அரசியல்வாதிகளின் ஆட்டம் இன்றும் தொடர்ந்து வருகிறது.
ஆர்.கே மிஸ்ரா குஜராத் காந்திநகரில் இருந்து செயல்படும் ஒரு மூத்த பத்திரிகையாளர்
குறிப்பு:- குத்தகை தொடர்பான வழக்கு 2016-ல் உச்சநீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது.
மொழிபெயர்ப்பு : பிரியா
How a hospital paid for from PM’s Relief Fund went to Adani