ஐ.டி துறையில் நடைபெறும் ஆட்குறைப்பு, வேலை நெருக்கடி தொடர்பாக குவார்ட்ஸ் இணைய இதழில் வெளியான கட்டுரையின் சுருக்கப்பட்ட மொழிபெயர்ப்பு.
ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு வரை வேலைவாய்ப்பைத் தருவதில் பிரதான துறையாக இருந்த $16,000 கோடி ஐ.டி துறை, இந்த ஆண்டு 56,000-க்கும் அதிகமான ஊழியர்களை பணிநீக்கம் செய்தது.
சில ஆய்வாளர்கள் 2008-ன் நிதி நெருக்கடியின் போது நடந்த வேலை இழப்புகளை விட இது மோசமான நிலை என்கிறார்கள்.
2017-ம் ஆண்டில், தொடக்க நிலை ஊழியர்களின் எண்ணிக்கை பாதியாக குறைத்துள்ளதால், வேலைவாய்ப்பு குறைந்துவிட்டது.
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டி.சி.எஸ்)-ம் இன்ஃபோசிஸ்-ம், முதல் இரண்டு பெரிய ஐ.டி. நிறுவனங்கள். ஒரு காலத்தில் வேலைவாய்ப்பை உருவாக்கும் முன்னணியில் இருந்த இவர்கள், இப்போது முதன்முறையாக ஊழியர் எண்ணிக்கையை குறைத்துள்ளனர்.
டெக் மஹிந்திரா போன்ற நடுத்தர அளவிலான நிறுவனங்களும் பல ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பின.
முந்தைய ஆண்டுகளில் சுமார் 1% ஊழியர்களை நிறுவனத்தின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியாதவர்கள் என்று வகைப்படுத்தி வெளியேற்றியதை ஒப்பிடும்போது, 2017-ம் ஆண்டில் இந்திய ஐ.டி. நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களில் 2% முதல் 6% பேரை வெளியேற்றியுள்ளன.
ஜனவரி மாதத்தில் இன்ஃபோசிஸ் 9,000 வேலைகளை வெட்டியது.
காக்னிசண்டில் சுமார் 6,000 இந்திய ஊழியர்கள் வேலை இழந்தனர்.
மும்பையைச் சேர்ந்த டெக் மஹிந்திரா அதிகரித்துவரும் தானியங்கி தொழில் நுட்பத்தை காரணம் காட்டி மனிதவளத்தை குறைப்பதற்கான திட்டத்தை செயல்படுத்தியது. ஒரு ஊழியர் அடுத்த நாள் காலை 10 மணியளவில் வேலையிலிருந்து தானாக விலகாவிட்டால் பணி நீக்கத்தை எதிர்கொள்ள நேரிடும் என மனித வள மேம்பாட்டு அதிகாரியால் மிரட்டப்படும் ஒரு சர்ச்சைக்குரிய ஆடியோ ஜூலை மாதத்தின் தலைப்புச் செய்தியானது. அதைத் தொடர்ந்து அந்த நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரி இச்சம்பவம் பற்றி விளக்கம் அளிக்க நேர்ந்தது.
மேலும், ஐ.டி பிரமிடில், அடித்தளத்தில் இருக்கும் ஊழியர்கள் மட்டுமின்றி, மூத்த ஊழியர்களும் பணி நீக்கத்தை எதிர்கொண்டனர்.
பணியமர்த்தல் மீது கட்டுப்பாடுகளை விதிப்பது !
புதிய வேலைவாய்ப்புகளிலும் மோசமான செய்தி அதிகரித்தது. 2017-ம் ஆண்டில், ஐ.டி நிறுவனங்களின் கல்லூரி வளாக நேர்முகத்தில் ஆள் எடுப்பது 50-70% வீழ்ச்சியடைந்தது.
முன்பு எதிர்கால ஒப்பந்தங்கள் கிடைக்கும் எதிர்பார்ப்பில் புதியவர்களை வேலைக்கு அமர்த்தினர். தற்போது ஒப்பந்தங்கள் கிடைப்பதன் அடிப்படையில் ஆளெடுப்பு நடக்கிறது. ஏனெனில், வருவாய் வளர்ச்சி குறைந்துவரும் நிலையில் ஊழியர்களை “ப்ராஜக்ட்” இன்றி “பென்ச்”இல் வைத்து ஊதியம் வழங்குவதற்கு நிறுவனங்கள் விரும்பவில்லை. சிறப்பு திறமை கொண்டவர்களை பணியமர்த்துவது அல்லது இருக்கும் ஊழியர்களின் திறனை மேம்படுத்துவது அவசியமாகிறது.
பல ஆண்டுகளாக, அதிக உழைப்புச் சக்தி தேவைப்படும் வேலைகளிலிருந்து, தொலைதூர தொழில்நுட்ப அடிப்படையிலான தீர்வுகள், வீடியோ கான்பரன்சிங், கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) ஆகியவற்றை நோக்கி இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றன.
இதன் விளைவாக டேடா எண்ட்ரி, சர்வர் பராமரிப்பு போன்ற பணிகள் ஒழிந்து வருகின்றன.
ஐ.டி. வேலைச் சந்தை லாபகரமானது அல்ல, அடுத்த சில ஆண்டுகளுக்கு இதுவரை இருந்த கனவு வேலை என்ற வாய்ப்புகள் இருக்கப் போவதில்லை. ஐடி சேவை வழங்குனர்கள் சரிவு நிலையில் உள்ளதால், வேலைச் சந்தை இன்னும் சில காலத்திற்கு அழுத்தமிக்க நிலையிலேயே இருக்க நேரிடும்.
நீண்ட கால நோக்கில், தானியங்கி தொழில் நுட்பத்துக்கு ஏற்ற உயர் திறன் கொண்ட ஒரு சில தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்கலாம். ஆனால் குறைந்த திறன் கொண்ட கீழ் நிலை தொழிலாளர்கள் தொடர்ந்து பாதிக்கப்படுவர். 2022-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் ஐ.டி. துறைகளில் ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்கு (சுமார் 700,000) வேலைவாய்ப்புகள் பறிபோகும். ஆனால், இந்திய தகவல் தொழில்நுட்ப ஊழியர்களில் 5%-க்கும் குறைவானவர்களே உயர் திறன் வாய்ந்த வேலைகளை கையாளக் கூடியவர்களாக உள்ளனர் என்று மனிதவளத்துறை அதிகாரிகள் மதிப்பிடுகின்றனர்.
அடுத்த சில ஆண்டுகளில், கீழ் மட்ட தொழில்நுட்ப வேலைகளில் சுமார் 40% ஒழித்துக் கட்டப்பட்டு தரவு விஞ்ஞானி – தரவு ஆய்வாளர் போன்ற உயர் ஊதியம் வழங்கப்படும் வேலைகளுக்கு போய்ச்சேரும்.
இதற்கிடையில், பணிநீக்கங்களாலும், பணிப் பாதுகாப்பின்மையாலும் , பண நெருக்கடி, கவலை, மனச்சோர்வு, குறைந்த சுய மரியாதை , ஊக்கமின்மை ஆகியவற்றை ஐ.டி ஊழியர்கள் போராடி வருகின்றனர்.
“பெரும்பாலான ஐ.டி. துறை ஊழியர்கள் வேலை நிமித்தம் தாங்கள் குடியேறிய நகரங்களில் சிறிதளவு சமூக ஆதரவுடனே வாழ்கின்றனர். வேற்று நகரங்களில் பணி செய்வோர் இளம் வயதினர் என்பதால், பெரும்பாலும் தனியாக இருக்கிறார்கள். திருமணமான பின்னர் தங்கள் குடும்பத்துடன் செலவிட நேரம் கிடைப்பதில்லை அலுவலகத்திலோ வீட்டிலோ சிக்கல் ஏற்படும்போது போது, அவர்களுக்கு உதவுவதற்கு எவரும் இல்லை” என்கிறார் பெங்களூருவின் மனநல மருத்துவ மற்றும் நரம்பியல் அறிவியலுக்கான தேசிய நிறுவனத்தில் பணியாற்றும் டாக்டர் பி.கே. கங்காதர்.
அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை என்பதன் பக்க விளைவுகள்
இந்த ஆண்டின் துவக்கத்தில் வெள்ளை மாளிகையில் டொனால்ட் டிரம்ப் அதிபர் பதவி ஏற்றது இந்தியாவிற்கு உதவிகரமாக இல்லை.
டிரம்ப் பதவியேற்றதில் இருந்து, H-1B விசா வழங்கும் முறைகளில் மாற்றம் கொண்டுவந்ததால், ஆறு வருட தற்காலிக பணி விசாவை பெரிதும் நம்பியிருந்த இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் எண்ணத்தில் மண் விழுந்தது.
மார்ச் 2017-ல், அமெரிக்க அரசாங்கம் H1-B விசாவின் “பிரீமியம்” செயலாக்கத்தை முடக்கியது. H-1B விசாவிற்கு மென்பொருள் பொறியாளர்கள் விண்ணப்பிக்க நிபந்தனைகள் கடுமையாக்கப்பட்டன. ஏப்ரல் மாதம், டிரம்ப் “அமெரிக்க பொருட்களை வாங்குவோம், அமெரிக்கர்களை பணிக்கு அமர்த்துவோம்” என்னும் உத்தரவில் கையெழுத்திட்டார். இது அமெரிக்காவிற்கு வேலை வாய்ப்பை மீட்டுத் தரும் வாக்குறுதியாகவும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களை ஆபத்திலும் தள்ளியது.
நவம்பர் மாதத்தில், அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் நீதிக் குழு, அமெரிக்க வேலைவாய்ப்புச் சட்டத்தைப் (HR 170) பாதுகாத்து இத்திட்டதின் வளர்ச்சிக்கான தன்மையை வழங்கியது. இது, 15%-க்கும் கூடுதலாக வெளிநாட்டவர்களை பணியமர்த்தியிருக்கும் எந்தவொரு அமெரிக்க நிறுவனத்தையும் “விசா சார்ந்தது” என்று வகைப்படுத்துகிறது. “இதனால், 50% க்கும் அதிகமான ஊழியர்களை அமெரிக்காவில் பணியமர்த்தியிருக்கும் இந்திய அயல் பணி நிறுவனங்களின் மீது அழுத்தம் பெருகி வருகிறது.
தற்போது அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கும் நெருக்கடி அதிகரித்துள்ளது. விசா மோசடியைத் தவிர்க்கும் பொருட்டு அமெரிக்க சுங்க மற்றும் குடிவரவு சேவைகள் (USCIS) நிறுவனம் பணியிடங்களுக்கு சென்று சோதனை செய்யும் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க திட்டமிடுகின்றனர்.
இந்திய ஐ.டி. நிறுவனங்கள், ஐ.டி அடிப்படையிலான அயலப் பணியில் வல்லவர்கள். இப்போது மதிப்புச் சங்கிலியில் தங்களை உயர்த்திக் கொள்ளும் பொருட்டு திட்டமிடல் மற்றும் வளர்ச்சியின் முந்தைய கட்டத்திற்கு திரும்பிச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.
அகழிகளில்
ஐ.டி. நிறுவனங்கள் தமது ஊழியர்களுக்கான வாய்ப்புகளையும், வேலையிழப்பையும் சமன் செய்ய முயற்சிக்கின்றன. உள்ளூர் மக்களுக்கே வேலைவாய்ப்பை வழங்கி, சேவை விநியோக மையங்களை அந்தந்த நாடுகளில் நிறுவ முயன்றன. இந்த முயற்சிகள் பெரிதாக உதவவில்லை, எனவே. இந்தியர்களுக்கு வேலை வாய்ப்புகள் குறைந்து வருகின்றன.
இந்த நடுக்கமான நிலை விரைவில் தீராது. ஆய்வாளர்களின் கருத்துப்படி வரும் வருடத்தில், ஆட்டோமேஷன் எனப்படும் தானியங்கித் தொழில் நுட்பம், இந்திய தகவல் தொழில் நுட்பத் துறையில் 70% ஊழியர்களை ஆபத்தில் தள்ளும். வளர்ந்த பொருளாதாரங்கள் எதிர்வரும் காலங்களில் தங்கள் சொந்த குடிமக்களுக்கு வேலைகளை உருவாக்கும். மறுபுறம், இந்தியா, குறைந்த அளவிலான உயர்தர வேலைகளை உருவாக்கும். திறமையான பணியாளர்களா,அதிக எண்ணிக்கையிலான பணியாளர்களா என்ற கேள்வி எழுகையில் நிறுவனங்கள் முன்னதையே தேர்வு செய்யும்.
இந்த “ஆக்கபூர்வமான” அழிவுகள் சிறிது காலம் தொடரும். அடுத்த இரண்டு – மூன்று ஆண்டுகள் தடைகள் தவிர்க்க முடியாதவை,
ஒரு நேர்மறையான மாற்றம் 2020-ம் ஆண்டுக்கு முன் காணப் படப் போவதில்லை.
நன்றி https://qz.com/