சென்னையின் முன்னணி தொழிலாளர் துறை வழக்கறிஞர் பாலன் ஹரிதாஸ் ஐ.டி துறையில் தொழிற்சங்கம் அமைப்பது குறித்தும், ஊழியர்களின் உரிமைகள் குறித்தும் ஆற்றிய உரையின் (in English) வீடியோ பதிவு. உரையின் சுருக்கம் தமிழில் தரப்பட்டுள்ளது.
இந்த உரை 10-01-2015 அன்று சென்னை பழைய மகாபலி புரம் சாலையில் உள்ள படூரில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் ஐ.டி ஊழியர் பிரிவு நடத்திய கலந்துரையாடல் கூட்டத்தில் நிகழ்த்தப்பட்டது.
வீடியோ : நன்றி வினவு
உரையின் தமிழ் சுருக்கம்
- இது தொடர்பான சட்டங்கள் – தொழில் தாவா சட்டம் 1947, தொழிற்சங்க சட்டம் 1926 மற்றும் தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம் 1947.
- தொழில் தாவா சட்டத்தில் தனிநபர் தாவா, கூட்டு தாவா என்று இரண்டு வகைகள் உள்ளன. கூட்டு தாவாவில் பணிச் சூழல் பற்றிய பிரச்சனைகளை எடுத்துக் கொள்ளலாம்.
- வேலை இழப்புக்கு மட்டும்தான் தனிநபர் நீதிமன்றத்தை அணுக முடியும்.
- 7 பேர் சேர்ந்தால் ஒரு தொழிற்சங்கத்தை அமைத்துக் கொள்ளலாம். தனியாக செய்தால் நீங்கள் பழி வாங்கப்படலாம். அந்த வகையில் தொழிற்சங்கங்கள் உங்களுக்கு வழி காட்ட முடியும்.
- தொழில் தாவா சட்டத்தின் கீழ் வராத நபர்களும் தமிழ்நாடு கடைகள், நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் தனக்கு நிவாரணம் தேடிக் கொள்ளலாம்.
- யூனியனில் சேருவதால் வேலை இழக்க நேருமா என்ற கேள்வியைப் பொறுத்த வரை, உங்களுக்கு முழு பாதுகாப்பு உள்ளது. கருத்துரிமையும், சங்கம் அமைக்கும் உரிமையும் ஒரு அரசியல் சட்ட அடிப்படை உரிமை. தொழிற்சங்கத்தில் சேருவது பாவம் இல்லை, அது ஒரு முறை தவறிய நடத்தையும் இல்லை.
- யூனியனில் சேருவது முறைகேடு என்று ஒரு நிறுவனம் ஒப்பந்தம் போட்டிருந்தால் அந்த ஒப்பந்தம் தொடக்கத்திலிருந்தே செல்லாத ஒன்று.
- வேலை இழந்தால் எப்படி நிவாரணம் பெறுவது? தொழில் தாவா சட்டத்தின் கீழ் பிரிவு 25F-ன் கீழ் 240 நாட்கள் பணி புரிந்த ஒரு ஊழியரை வழிமுறைகளை பின்பற்றாமல் வேலை நீக்கம் செய்ய முடியாது.
- பெருமளவு ஊழியர்கள் வேலை நீக்கம் செய்யப்படும் போது அதில் நீதிமனங்கள் தலையிட்டு தடை விதிக்க பெருமளவு வாய்ப்பு உள்ளது.
- தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஒரு ஊழியர் வேலை நீக்கம் செய்யப்படுவதாக இருந்தால் அது முறைகேடான நடத்தைக்கு மட்டுமாகத்தான் இருக்க முடியும். அப்போது கூட ஒரு விசாரணை நடத்தி குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டும்.
- அப்படி இருப்பினும், இது தொடர்பாக நீங்கள் ஒரு வழக்கு தொடரலாம்.
- தொழிலாளர் தாவாவில் ஊழியர், நிறுவனம் மற்றும் அரசு என்று முத்தரப்பு ஈடுபாடு உள்ளது. அரசு நியமித்த அதிகாரி பிரச்சனையை தீர்த்து வைக்கா விட்டால் நீதிமன்றத்தை அணுகலாம்.
- சூப்பர்வைசர், மேனேஜர் போன்றவர்களுக்கு வேலை நேர வரம்பிலிருந்து மட்டும்தான் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. வேலை இழப்பு தொடர்பாக அவர்களும் வழக்கு தொடரலாம். 6 மாதம் பணி புரிந்த யாரையும் முறையான காரணம் இன்றி வேலை நீக்கம் செய்ய முடியாது.
- பணி நிலைமைகளை பொறுத்தவரை, ஒரு தொழிற்சங்கம்தான் அதை முன்னெடுக்க முடியும்.
- தொழிற்சங்கத்தில் சேர்ந்தால் கறுப்பு பட்டியலில் சேர்த்து விடுவார்கள் என்ற கேள்வியைப் பற்றி. இது முழுக்க முழுக்க சட்டவிரோதமானது. அரசியல் சட்டத்துக்கு எதிரானது.
- வழக்கு தொடுத்தால் எவ்வளவு காலம் பிடிக்கும்? என்ற கேள்வியைப் பொறுத்த வரை, நீதிமன்றத்தை அணுகா விட்டால் நீங்கள் தொடர்ந்து சுரண்டப்படுவீர்கள். மற்ற வழக்குகளைப் போல் இல்லாமல், தொழில் தாவா வழக்குகளில் நீதிமன்றங்களும் விரைவில் முடிக்க உதவுகின்றன. சில சமயம் 1 மாதத்தில் கூட வழக்கு முடிந்து விடக் கூடும். எவ்வளவு காலம் என்று அறுதியிட்டுக் கூற முடியாது.