செய்தி : “உச்சநீதிமன்றத்திற்குத் தமிழ்நாட்டில் உள்ள நேர்மையாளர்களின் மனமார்ந்த நன்றி. இந்த அரசு, உச்சநீதிமன்ற ஆணையை ஏற்று செயல்பட மக்கள் வலியுறுத்த வேண்டும். லோக் ஆயுக்தா, ஊழல் அரசியல் பிணியைத் தீர்க்கும் மருந்து” – கமல்ஹாசன்
“லோக் ஆயுக்தா, ஊழல் அரசியல் பிணியைத் தீர்க்கும் மருந்து” – கமல்ஹாசன்
கண்ணோட்டம்:
கர்நாடகாவில் ஊழலை ஒழிப்பதற்காக அமைக்கப்பட்ட இந்த லோக் ஆயுக்தா அமைப்பின் தலைவர் பாஸ்கர் ராவ், அவரது மகன் அஸ்வின் ராவ், அவரது உறவினர் கிருஷ்ண ராவ், லோக் ஆயுக்தாவின் இணை கமிஷனர் (Joint Commissioner) சையது ரியாஸ், லோக் ஆயுக்தாவின் தலைமை நிலைய ஊழியரான வீ.பாஸ்கர், ஹோட்டே கிருஷ்ணா ஆகியோர் மெகா ஊழல் செய்து அம்பலப்பட்டு நின்றது அனைவரும் அறிந்ததே.
குற்றம் சுமத்தப்பட்ட அதிகாரிகளை/நபர்களை அவ்வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டுமானால், அதற்கு நீ எனக்கு இலஞ்சம் கொடுக்க வேண்டும் என்று தான் இவர்களின் ‘சேவை’ அங்கு செவ்வனே நடந்து கொண்டு இருந்திருக்கிறது. இவர்களால் பாதிக்கப்பட்ட ஒரு அதிகாரி புகார் அளித்ததின் பெயரில் இவர்களின் ஊழல் கொட்டமும் பல பேர் பாதிக்கப்பட்ட விவரமும் அதன் பின்னரே வெளிவர தொடங்கியது.
இதாவது பரவாயில்லை, கடந்த 2003 முதல் தான் முதல்வராக பதவியேற்ற பின், குஜராத்தில் லோக் ஆயுக்தா விற்கு தலைவரை நியமிக்காமலும் அதனை செயல்பட விடாமலும் செய்தவர் வேறு யாருமில்லை ‘துடிப்பான’ குசராத் ன் முதல்வரும், நம் பாரதத்தின் இந்நாள் பிரதமரும் திரு. நரேந்திர மோடி அவர்கள் தான்.
‘கொய்யால திருவிழா நடந்தா தான டா’ பாணியில் ‘லோக் ஆயுக்தா இருந்தா தான பிரச்சன!!! ‘ என்றவாறு தான் அதனை இயங்க விடாமல் செய்து வந்தார்.
சரித்திரம் இவ்வாறு இருக்கையில், சதிலிலீலாவதி நாயகன், ‘கல்யாணத்தை நிறுத்த சீப்பை எடுத்து ஒழித்து வைக்க சொல்கிறார்’.
இதுபோன்று அரசியலற்ற மொன்னைகள் கட்சி ஒன்றை ஆரம்பித்து வைத்துக்கொண்டு, NGO பாணியிலான அரசியலுக்கு மக்களை ஆட்படுத்த வேண்டும், மக்களை மேலும் முட்டாளாக்க வேண்டும் என்ற நப்பாசைதான் நடன நாயகனுக்கு நாவில் தாண்டவமாகிறது.
இருக்கின்ற இந்த அரை குறை ஜனாயகத்துக்கும் ஆபத்து என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகளே மக்கள் மன்றத்தில் வந்து நின்று நீதித்துறையில் நடக்கும் ஊழலையும் முறைகேடுகளையும் அம்பலப்படுத்தி கொண்டிருக்கும் பரபரப்பான தருணத்தில், தனியார் நிறுவனங்களும் நீதித்துறை கனவான்களும் இந்த லோக் ஆயுக்தாவினால் தண்டிக்கப்பட முடியாது என்பது, மக்கள் நீதி மய்ய நிறுவனருக்கு தெரியாதா, இல்லை தான் பேசுவது தான் உலகின் அதி சிறந்த சிந்தனையின் வெளிப்பாடு என்று நினைத்துக் கொண்டுள்ளாரா?
(முன்னாடி வெறும் நடிகர் கமல் ஹாசன் என்று இருந்தார், இப்போது கட்சி வேறு ஆரம்பித்துவிட்டார், ஆதலால் அவரை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் என்று தான் அழைக்கின்றன அனைத்து ஊடகங்களும்)
இதுபோன்ற அரசியலற்ற கோமாளிகளின் கூத்துக்களை எல்லாம் இன்னும் எத்தனை காலம் சகித்துக் கொண்டிருப்பது என்றுதான் தெரியவில்லை.
– R. ராஜதுரை