டெல்லியில் போராடும் விவசாயிகளுடன் கவிஞர் மனுஷ்ய புத்திரன்
“ஜந்தர் மந்தரில் போராடிக்கொண்டிருக்கும் நம் விவசாயிகளை நேற்று போய் சந்தித்தேன். காவல்துறை ஒதுக்கிக்கொடுத்த ஒரு பாக்ஸ் வடிவிலான இடத்தில் வாடி வதங்கிய முகத்துடன் அமர்ந்திருந்தவர்களைக்கண்டதும் பெரும் துயரம் மனதை ஆட்கொண்டது.
விவசாயிகள் போராட்ட தலைவர் அய்யாக்கண்ணு விவசாயிகள் எவ்வளவு துயரங்களை அனுபவித்துக்கொண்டு 26 நாட்களாக கடும் வெய்யிலில், அரை நிர்வாணமாக , உணவு – கழிப்பிட பிரச்சினைகள், உடல் நலக்குறைவு ஆகியவற்றோடு போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதைச் சொன்னார்.
“உங்க ஊர் துவரங்குறிச்சியில் இருந்து போராட்டத்திற்கு வந்த பழனிச்சாமி உடம்பு சரியில்லாம போய் ஆஸ்பத்திரியில் இருக்கிறார்.” என்றார்.
நான் அவர்களிடம் உரையாற்றும்போது “இந்தப்போராட்டம் தமிழக விவசாயிகளுக்கானது மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளிடமும் பெரும் எழுச்சியை உருவாக்கக் கூடிய போராட்டம்” என்பதைக் குறிப்பிட்டேன்
அங்கே உட்கார்ந்திருந்த வயது முதிர்ந்த விவசாயிகளின் முகங்களைக் காணும்போது மனம் கனத்துவிட்டது. ” அய்யா நீங்க இதையெல்லாம் டிவில பேசுங்கய்யா” என்று அவர்கள் திரும்பத் திரும்பச் சொன்னபோது அதிகாரத்தின் கேளாக் காதுகளை எப்படி திறப்பது என்று தெரியாமல் திகைத்து நின்றேன்.
கவிஞர் குட்டி ரேவதியும் நேற்று விவசாயிகளிடம் பேசினார். விவசாயிகள் தங்களைத் தாங்களே துன்புறுத்திக் கொள்ளாமால் மிகுந்த உறுதியுடன் போராட்டத்தை முன்னெடுத்துச்செல்ல வேண்டும் என்பதைப் பற்றி பேசினார்
டெல்லி வாழ் தமிழர்கள் குறிப்பாக மாணவர்கள் விவசாயிகளுக்கு உதவிக்கொண்டிருக்கிறார்கள். டெல்லியில் போராடும் நம் விவசாயிகளுக்காக ஒட்டுமொத்த தமிழகமும் கிளர்ந்து எழ வேண்டும். போராடும் நம் விவசாயிகளை நாம் கைவிட்டால் வரலாறு நம்மை மன்னிக்காது என்ற உணர்வுடன் அங்கிருந்து விடைபெற்றோம்.
பேஸ்புக்கில் கவிஞர் மனுஷ்ய புத்திரன்
அதிகாரத்தின் காது உழைக்கும் சாதி ‘கருப்பு’ மனிதர்களைகப் பொறுத்தவரை மூடப்பட்டுதான் இருக்கும். அம்பானி, அதானி, சினிமா நடிகர்கள், சாமியார்கள் உள்ளிட்ட ‘வெள்ளை’ மனிதர்களுக்குத்தான் அது செவி சாய்க்கும்.
அந்தக் காதுகளை மட்டுமின்றி, அதிகாரத்தையே அசைத்துப் பார்க்கும் வகையில் போராட்டங்களை முன்னெடுப்பதுதான், ஜந்தர் மந்தரில் போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு உறுதுணையாக நாம் செய்ய வேண்டியது.
1 ping