குடியரசுத்தலைவர் தேர்தலில் பா.ஜ.க கூட்டணி சார்பில் வேட்பாளராக பிகார் ஆளுநர் ராம் நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து டைம்ஸ் நவ் தொலைக்காட்சி “முக்கியமான தலித் தலைவரை எதிர்க்க எதிர்கட்சிகளால் முடியுமா?” என்று செய்தி வெளியிட்டது. இந்த முடிவானது மோடி மற்றும் அமித்சாவின் மிகப்பெரிய செயல்தந்திரம் என்று பாராட்டியது.
பி.ஜே.பி யின் முகமூடிகள் மாறிக்கொண்டே இருக்கின்றன. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அன்றைய மன்மோகன் சிங் அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் கோபத்தை அறுவடை செய்ய மோடியை முன்னேற்றத்தின் முகமூடியாக எப்படி ஆர், எஸ். எஸ் மக்களிடம் கொண்டு சென்றதோ அது போல இன்று நாடு முழுவதும் சிறுபான்மை மற்றும் தலித் மக்களுக்கு எதிரான வ்ன்முறையை மறைக்க ராம் நாத் கோவிந்த் என்ற தலித் முகமூடி தேவைப்படுகிறது.
குஜராத்தில் இறந்து போன மாட்டின் தோலை உரிக்க எடுத்து சென்ற தலித் மக்கள் மீதான வன்முறையைக் கண்டு நாடு முழுவதும் அதிர்ச்சி அலை எழுந்தது. அதற்கு எதிரான போராட்டம் குஜராத்தில் தீவிரமாக நடந்த போது அதைப்பற்றி வாய் திறக்காத மோடி, அமித்சாவின் கூட்டணி இன்று குடியரசுத்தலைவர் பதவிக்கு தலித் வேட்பாளரை நிறுத்தியதை மிகப்பெரிய சாதனையாக பீற்றிக் கொள்கிறது. குறிப்பாக உத்தரபிரதேசத்தில் சகரான்பூரில் தலித் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட வ்ன்முறைக்கு எதிராக அம்மக்களின் எதிர்வினை ஆர், எஸ். எஸ்க்கு சாட்டையடி கொடுத்தது போல இருந்தது. மோடியின் மூன்றாண்டு கால ஆட்சியானது பெருவாரியான மக்களுக்கு எதிரானதாகவே இருந்து வந்து உள்ளது. இன்னும் சொல்லப்போனால் மோடியின் பக்தர்களே கலங்கி போகும் அளவுக்கு மூன்றாண்டு கால ஆட்சி நிறைவேறியிருக்கிறது.
கடந்த 2002-ம் ஆண்டு மோடியின் ஆட்சியில் குஜராத்தில் நடந்த முஸ்ஸிம் இனப்படுகொலைகளுக்குப் பிறகு எவ்வாறு அப்துல்கலாம் என்ற முகமூடி தேவைப்பட்டதோ அவ்வாறு இன்று நாடு முழுவதும் தலித் மக்கள் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கும் நிலையில் இவர்களுக்கு ஒரு தலித் வேட்பாளர் அடையாள முகமூடி தேவைப்படுகிறது. அதுவும் ராம்நாத் கோவிந்த் ஒரு பா.ஜ.க/ஆர்.எஸ்.எஸ் பேர்வழி என்பதை சொல்லத்தேவையில்லை. இந்த அரசானது மிக வேகமாக அம்பலப்பட்டு வருகிறது. நாம் இந்த முகமூடிகளை கண்டு ஏமாறாமல் இந்த அரசாங்கத்தின் நிஜ முகங்களையும் , பெருவாரியான மக்களுக்கு எதிரான நோக்கத்தையும் அம்பலப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. விரைவில் நிஜ முகங்கள் மக்களின் கரங்களில் உடைபடும்.
– ராஜ்