சமூக பிரச்சனைகள், ஊடகங்கள், திரைப்பட வியாபாரம்
கத்தி படத்தில் ஊடகங்கள் பரபரப்பு செய்திக்காக உண்மையான பிரச்சினைகளை வெளியில் சொல்வதில்லை “காசுக்கான ஊடகதர்மம்” என்று பேசினார் இயக்குனர் முருகதாஸ்.
இன்று எல்லா தலைப்புசெய்திகளையும் ஒன்றிணைத்து காசுக்காக ஒரு கமர்ஷியல் படம் எடுப்பது யார்? காசுக்காக விலை போன ஊடகங்கள் என்று கேவலமாகப் கத்தி படத்தில் கதை அமைத்தது யாரோ அவர்தான் இன்று அதே ஊடகத்தை காட்சிப் பொருளாக்கி சர்காரின் கல்லா கட்டி காசாக்குகிறார்.
ஜல்லிக்கட்டு, கதிராமங்கலம், மீத்தேன் பிரச்சனை, கந்துவட்டி கொடுமை ஆகியவற்றை கலந்து ஒரு கமர்சியல் படம் கொடுப்பது பிரச்சனையை வியாபாரம் ஆக்குவதா நியாயம் ?
சமுதாய பிரச்சனைக்காக வணிக படமா, வணிக பட வியாபாரத்திற்காக பிரச்சினையை உள்ளே சொருகும் உத்தியா?
மெர்சல் படத்தில் கடைசி கட்ட கட்சி அரசியல் பேசியதால் இலவச விளம்பரம் கிடைத்தது இதற்கும் கிடைக்கும் என்று மனப்பால் குடித்திருக்கிறார்.
கார்ப்பரேட் கிரிமினல்
முதலில் கார்ப்பரேட் கேவலமானவர்கள் என்று கத்தி படத்தில் சொன்னீர்கள். அதை அப்படியே புறந்தள்ளி இன்று ஒரு கார்ப்பரேட் கிரிமினல் தான் சமுதாயத்தை காப்பாற்ற முடியும் என்று அந்தர் பல்டி அடிக்கிறீர்கள்.
இதற்கு பியூஸ் மனுஷ் போன்ற ஆர்வலர்கள் ஆதரவு தெரிவித்து பேசும் காட்சிகள் தொடர்பாக பியூஸ் மனுஷ் மற்றும் அவரின் ஆதரவாளர்களை கேள்வி கேட்கத் தோன்றுகிறது… “நீங்க சமூக சேவை செய்தீர்களா? பியூஸ் மனுஷ். கார்ப்பரேட்டுக்கு எதிராக பேசிய நீங்கள் இன்று கார்ப்பரேட் ஆதரவாக மாறுவது ஏன்? சினிமா மோகத்துக்காக உங்கள் போராட்டங்களை பலி கொடுக்கிறீர்களா?”
கூகுள் சுந்தர் பிச்சை முன்மாதிரியா?
கூகுள் CEO சுந்தர் பிச்சையை முன்மாதிரியாக எடுத்துக் கொண்டால் அதற்கும் சில எதிர்வினை உண்டு.. ப்ராஜெக்ட் MAVEN மேவன் என்று மக்கள் சார்ந்த தகவல்களை கொண்டு ராணுவம் தொடர்பான போர் முறைகளுக்கு வியூகங்களை அமைக்கும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தவறு என்று அந்த கூகுள் நிறுவனத்தைச் சேர்ந்தவர்களும் என்ற Gizmodo அமைப்பு செய்த புலனாய்வு அடிப்படையிலும் தவறு என்று செய்திகள் உள்ளது.
ப்ராஜெக்ட் மேவன் புயலை கிளப்பும் பிரச்சனை. இந்த விஷயம் யாரும் எதிர்பார்க்காத ஒன்றை உருவாக்க வாய்ப்புள்ளது. சரியாக சொல்ல வேண்டும் என்றால், கூகுளிடம் உலகில் இருக்கும் பல கோடி மக்களின் தகவல்கள் இருக்கிறது. நம்முடைய தெரு எப்படி இருக்கும் என்று நம்மைவிட கூகுளிற்குத்தான் நன்றாக தெரியும்.
இதனால் இதை வைத்து அமெரிக்க ராணுவம் என்ன மாதிரியான வேலைகளை வேண்டுமானாலும் செய்யலாம். இதனால் புராஜக்ட் மேவன் பெரிய பீதியை உருவாக்கியுள்ளது.
இந்தியாவில் பிறந்தவர் என்று பெருமை சொல்லிக் கொண்டாலும் அமெரிக்க ராணுவ தொழில்நுட்பம் இந்தியாவை தாக்காது என்று அறுதியிட்டு சொல்ல முடியுமா சுந்தர் பிச்சை அவர்களே?
பாலியல் குற்றவாளிகளுக்கு பணத்தை அள்ளிக் கொடுக்கும் கூகுள்
2018 தீபாவளிக்கு நான்கு நாட்கள் முன்னாடி கூகுள் நிறுவனத்தை சார்ந்த பல்வேறு ஊழியர்கள் பல்வேறு இடங்களில் ஒரு போராட்டத்தை நடத்தினர்.
அது என்னவென்றால் பாலியல் தொடர்பான புகார்களை புகார்களில் சம்பந்தப்பட்ட மேனேஜ்மென்ட் சேர்ந்த ஆட்களுக்கு அதிக பணம் கொடுத்து செட்டில்மெண்ட் செய்ததாக புகார் . உழைப்பாளர்களின் பணத்தில் குற்றம்சாட்டப்பட்ட ஆன்டி ரூபின் அவர்களுக்கு 9 கோடி டாலர் settlement செய்ததாக அதிருப்தி எழுந்தது. அதனால் 50 நாடுகளில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறி தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து தெரியுமா?
பொய் சொல்வதற்கு மெகா நடிகர்களா?
CEO சுந்தர்பிச்சை போன்ற நபர்கள் இந்தியாவை காப்பாற்றுவார்கள் என்று சினிமாவிலும் பொய் சொல்ல வேண்டாம். இயக்குனர் முருகதாஸ் அவர்களே? ஆனால் நம்புவது போல பொய் சொன்னா மக்கள் நம்புவதற்கு வாய்ப்புகள் அதிகம். அதிலும் விஜய் போன்ற நடிகர்கள், மகா MEGA நடிகர்கள் சொன்னால் பாமர மக்கள் நம்புவதற்கு வாய்ப்புகள் மிக மிக மிக அதிகம். தமிழ் மக்களின் சினிமா மோகம் என்ன என்று தெரியாதா ?
விஜய் போன்ற நபர்கள் அரசியல் ஆசை ஏற்பட்டால் நேரடியாக மக்கள் சேவையில் ஈடுபட்டு, மக்களுக்கு நன்மை செய்து, மக்கள் பிரச்சனை ஏற்படும் போதெல்லாம் மக்களுக்காக குரல் கொடுத்து, மக்களோடு மக்களாக பழகி அரசியல் அரியணை ஏறலாம்.. ஆனால் சினிமாவில் மட்டும் சேவை செய்வதை செய்துவிட்டு ஸ்ட்ரைட்டாக அரசியல் அரியணை ஏறும் கனவு அநியாயமாகத் தெரியவில்லையா?
படத்தின் காட்சிகளை PREVIEW தியேட்டர்களில் Rush போட்டு பார்க்கும் போது உங்களுக்கே சிரிப்பாக தெரியவில்லையா? எதை திணித்தாலும் மக்கள் பார்ப்பார்கள் என்ற நம்பிக்கையை உங்களுக்கு விதைத்தது யார்? இயக்குனர் முருகதாஸ் அவர்களே? இந்த லட்சணத்தில் கதை திருட்டுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்று விஜய் ஒதுங்கிக் கொண்டதாக திரு பாக்கியராஜ் அவர்கள் பேட்டி அளித்துள்ளார்.
விஜய் “கத்தி படத்தில் கதைத் திருட்டு பற்றி பேசும்போது விரல் சூப்பிக்கொண்டு கொண்டிருந்தீர்கள்.. அது விவாதமாகி ஓய்ந்த பிறகு அதே இயக்குனர் திரும்பவும் வருகிறார் . ஏற்கனவே இவர் திருடியவருக்கு வாய்ப்பு கொடுக்கலாமா எனும்போது ஜனநாயக அடிப்படையில் கொடுக்கலாம் என்று யோசிக்கிறீர்கள்… திரும்பவும் சந்தர்ப்பம் கொடுத்தீர்கள்… அவ்வளவு அப்பாவியான நீங்கள் சினிமாவில் மட்டும் வீரவசனம் பேசுவது நகைச்சுவை ஆக இருக்கிறதா? காட்சிப் பிழையா?
சர்கார் கதைத்திருட்டு பிரச்சனைக்கும் கத்தி கதை திருட்டு பிரச்சினையின்போது என்ன செய்தீர்களோ அதே போல் விரலில் சூப்பிக்கொண்டு. இருக்கிறீர்கள். உண்மையில் நீங்கள் அப்பாவியா புத்திசாலியா சந்தர்ப்பவாதியா?” பதிலை விஜய் அவர்களிடமே விட்டு விடலாம்.
உங்கள் படத்திற்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்து தீர்வு காண நேரம் இல்லை. மனதும் இல்லை.
இந்த லட்சணத்தில் கூரைமேல் ஏறி கோழி பிடிக்க முடியாத நீங்கள் வானத்தில் ஏறி வைகுண்டம் காட்ட போகிறீர்கள்.. ஒரே படத்தில் நேராக அரசியல் செய்யும் ஆசை ..உங்கள் அரசியல் ஆசை . உங்கள் அப்பா நினைக்கலாம் என் படத்தில் நடித்த தே.மு.தி.க விஜயகாந்த் அவர்களே அரசியல் சிம்மாசனம் ஏறும் போது “என் மகன் நீ ஏற முடியாதா?” என்று எஸ் ஏ சந்திரசேகர் நினைக்கலாம்.
திரையில் நடத்தும் புரட்சி
சர்கார் படத்தில் நீங்க சொல்ல நினைப்பதெல்லாம் புரட்சி என்று நினைப்பது முரணாக உள்ளது..
ஒரு நபர் 20 பேரை அடிப்பது போல காட்டப்படுவது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை உங்கள் புரட்சி கலந்த அரசியல் சர்கார் படம். பேசியே மக்களை கவருவீர்கள். நான் சுவாசிப்பது மீனவ உப்புக்காற்று என்று சொல்லி ஜாதி ஓட்டுக்களை வாங்க நினைக்கும் அரசியல்வாதிபுத்தி தெரிகிறது.
ஒருதடவை மைக் பிடித்து பேசினால் பார்வையாளர்கள் எல்லாரையும் கவரும் என்று நீங்கள் திரைக்கதை அமைக்கலாம் ஆனால் பார்ப்பவர்கள் காதில் பூ சுற்றுவது போல் இல்லையா? பேச்சாளர்கள் இல்லாத கட்சிகளை கொண்டுள்ளதா தமிழ்நாடு ?
குரலை கம்மி கொண்டு பேசினால் சோகம் துக்கம் எல்லாம் பார்வையாளர்களை தொற்றிக்கொள்ளும் என்று யார் சொன்னார்கள். பேசி முடித்ததற்கு பின் மக்கள் எல்லோரும் கூட்டம் கூட்டமாக தலைவன் பின்னால் அணி திரள்வது நாடக பாணியாக தெரியவில்லையா? ஒரே பாட்டில் அரசியலில் முன்னேறும் விக்ரமன் படம் பாணி கதையோட்டம்
ஐ.டி கம்பெனிகளில் பெரும் தலைகள் பலர் பேசுவதை கேட்டு உள்ளீர்களா?? ஐ.டி தலைவர்கள் உரையாற்றும் உப்புமா சொற்பொழிவுகளை, பொய் புனையும் பொழிவுகளை காசு கொடுத்தால் கூட யாரும் கேட்க மாட்டார்கள்..IT நிறுவன ஊழியர்கள் .
திரைக்கதை பாணியில் மக்களே சுந்தர் ராமசாமி பாத்திரத்தை பற்றி பேசுவதாக உரையாடுவதாக பத்து பதினைந்து கட் ஷாட்டுகள் வைத்தால் சுந்தர் ராமசாமி மக்கள் மத்தியில் உயர்ந்ததாக சொல்லும் கதை சொல்லும் உத்தி சிரிப்பாக குழந்தைத்தனமாக தெரியவில்லையா?
படம் 3500 திரை தமிழ் வெளியாகிறது. ஒரு நாளைக்கு 35 கோடி கல்லா கட்டும். போட்டிக்கு எந்த படமும் தீபாவளிக்கு இல்லைஎன்பதால் வெற்றிப்படம் என்று கொண்டாடலாம்.. ஆனால் இதுவும் கடந்து போகும்… அரசியல் கனவையும் சேர்த்து..
“இன்று கூட போதிதர்மரைப் பற்றி மறந்து விட்டீர்கள், போதிதர்மரின் அருமை உங்களுக்கு தெரியவில்லை, போதிதர்மர் எப்பேர்பட்ட ஆள் தெரியுமா? என்று கதையளந்த கருத்து திணிப்பு செய்த நீங்கள் போதிதர்மரை ஞாபகம் வைத்து உள்ளீரா” லார்டு லபக்கு தாஸ் என்கிற இயக்குனர் முருகதாஸ் அவர்களே?
சர்க்காரை புறக்கணிக்கலாம்.
– காசிராஜன்
1 ping