பத்திரிக்கை செய்தி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, தமிழ்நாடு
5.1.18
தமிழக அரசுப் போக்குவரத்துத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வுக் கோரிக்கையை ஒட்டி நடந்த பேச்சுவார்த்தையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் தன்னிச்சையாக முடிவு அறிவித்ததை பெரும்பான்மைத் தொழிற்சங்கங்கள் ஏற்கவில்லை. ஆவலுடன் எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கவில்லை என்பதால் தொழிலாளர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். ஊதிய உயர்வு ஒப்பந்தக் காலம் முடிந்து ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகியும் அமைச்சரும், அதிகாரிகளும் தொழிலாளர்மீது அக்கறையின்றி பேச்சுவார்த்தையைத் தள்ளிப் போட்டே போகின்றனர். போக்குவரத்துத் துறை நட்டத்தில் இயங்குவதாகக்கூறி, கடந்த 10 நாட்களுக்கு முன்னால் இயங்குகின்ற பேருந்துகளை குறைத்துள்ளது, தமிழக அரசு. இதனால், பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து கூட்ட நெரிசலில் முட்டி மோதி பயணம் செய்கின்றனர்.
தொழிலாளர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்த தொகை ரூ 7,000 கோடியை யாருடைய அனுமதியுமின்றி அரசு அதிகாரிகள் எடுத்துச் செலவு செய்துள்ளனர். ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய பணப்பலன்கள் உடனடியாகக் கிடைப்பதில்லை. ஓரிரு ஆண்டுகள் காத்திருந்து தவணை முறையில்தான் அவர்கள் பெறுகின்றனர். இந்த ரூ 7,000 கோடியை உடனடியாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளன, சங்கங்கள். இதுபற்றி 4-ம் தேதி பேச்சுவார்த்தையில் மவுனம் சாதித்துள்ளார், அமைச்சர். யார் பணம், யார் எடுத்து வீணடிப்பது? போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்திற்கு இவையெல்லாம்தான் காரணம். ஜனவரி 4-ம்தே தி அனைத்து பிரச்சனைகளையும் பேசி முடிப்பதாக வாக்குறுதி அளித்து பேச்சு வார்த்தையின்போது தன்னிச்சையாக அமைச்சர் அறிவித்ததுதான், தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்திற்கு அடிப்படைக் காரணம். சங்கங்களுடன் இனி பேச்சுவார்த்தை நடத்தமாட்டேன் என ஆணவமாக அறிவிக்கிறார் அமைச்சர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்மீது பேருந்துகளின் கண்ணாடி உடைப்பு, மக்கள் சேவையில் ஈடுபட்ட பேருந்துகளை மறித்தனர் போன்ற பொய்க் காரணங்களைக் காட்டி போலீசை வைத்து கைது நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது, தமிழக அரசு. போராட்டத்தை ஒடுக்குவதற்கு அ.தி.மு.க. சங்க நிர்வாகிகளைக் கொண்டு பேருந்துகளை ஓட்டுவது, தினக்கூலி ஓட்டுநர்கள் தேவை என பஸ் டிப்போக்களில் விளம்பரப்படுத்தி அடியாட்களைக் கொண்டு பேருந்துகளை இயக்குவது போன்ற நயவஞ்சக செயல்களில் ஈடுபட்டு வருகிறது, திவாலான அ.தி.மு.க. அரசு. இதை புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது. போராடுகின்ற தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கின்றோம்..
போக்குவரத்துத் தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!
உழைக்கும் மக்களே,
- அரசின் வஞ்சகத்தால் வாழ்வுரிமை இழந்து போராடுகின்ற போக்குவரத்துத் தொழிலாளர்களின் போராட்டம் சரியானதே!
- அரசின் செயல்பாடுகள் போக்குவரத்துத் துறையை தனியார்மயமாக்குவதன் ஒரு பகுதி! கட்டண உயர்வைத் திணிப்பதற்கான சதி!
- நமக்கு எதிரி போக்குவரத்துத் தொழிலாளர்கள் அல்ல! தகுதியிழந்த அரசு இயந்திரம்தான்!
- ஊழல், பென்சன் பணம் கொள்ளை, அதிகார முறைகேடுகளில் ஈடுபட்ட அதிகாரிகள் – அமைச்சர்களை செருப்பால் அடித்து விரட்டுவோம்!
இவண்,
அ.முகுந்தன்,
தலைவர்,
பு.ஜ.தொ.மு., தமிழ்நாடு.
தொடர்புக்கு –9444442374